உ
சிவமயம்
ஒளவையார் அருளிய
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன் - அரை ஞாணும் பூந்துலகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும், பெரும்பாரக் கோடும் 5
வேழ முகமும் விளங்கு சிந்தரமும்,
அஞ்சு கரமும், அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்,
நான்றவாயும் நாள் இருபுயமும்,
மூன்று கண்ணும், மும்மதச் சுவடும். 10
இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்,
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிரே!
புப்பழம் நுகரும் மூஷிக வாகன! 15
இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே,
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளம்தனில் புகுந்து 20
குருவாடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என்
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 25
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணை இனிதெனக்கு அருளி
கருவிகள் ஒடுக்கும் கருத்தினை அறிவித்து,
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து 30
தளம் ஒரு நான்கும் தந்துஎனக் கருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பதே வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும் 35
பேறா நிறத்திப் பேச்சுரை அறுத்தே,
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி,
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி அதனில் கூடிய அச்சபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து,
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45
குமுத சகாயன் குணத்தையும் கூறி,
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்ச்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூச்சமும்
என்முகம் ஆக இனிதெனக் கருளிப் 50
புரியிட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி,
இருத்தி முத்தி இனிது எனக் கருளி,
என்னை அறிவித்து, எனக்கருள் செய்து 55
முன்னை வினையின் முதலைக் களைந்தே,
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து,
இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60
எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் கலைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி,
அனுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி,
அஞ்ச க்கருத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து 70
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா! விளைகழல் சரணே!
No comments:
Post a Comment